காவிரிப் பிரச்சனை ஆரம்பமான 1924ஆம் ஆண்டுதான் நானும் பிறந்தேன். பிறந்தது முதல் இதுவரை அந்தப் பிரச்சனைக்காகத்தான் நான் போராடிக் கொண்டிருக்கிறேன் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற மேட்டூர் அணை பவள விழா நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் கருணாநிதி பேசுகையில், மேட்டூர் அணையின் பவள விழா நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாகக் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குவதிலும், பவள விழாக் கோபுரம் கட்டிட கால்கோள் இடுவதிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
'உழவ ரோதை மதகோதை
உடைநீ ரோதை தண்பதங்கொள்
விழவ ரோதை சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி'
'மருங்கு வண்டு சிறந்தார்ப்ப
மணிப்பூ ஆடை அது போர்த்துக்
கருங்கயற்கண் விழித்தொல்கி
நடந்தாய் வாழி காவேரி'
என்றும், காவிரியின் வெள்ளம் பாயும் மகிழ்ச்சியை சிலப்பதிகாரம் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது.
தமிழ் இலக்கியத்திலும், தமிழர் தம் வாழ்விலும் வளம் சேர்த்த காவிரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வரும் வேளைகளில் அதனைத் தடுத்து, சேமித்து வைத்து அறுவடைக் காலம் வரை தேவையான நேரங்களில் நீரைப் பயன்படுத்துவதற்கு அணை ஒன்று கட்டப்பட வேண்டும் எனும் எண்ணம் 19ஆம் நூற்றாண்டில் எழுந்தது.
அதனைத் தொடர்ந்து, நமது நாட்டிலிருந்த அன்றைய ஆங்கிலேய ஆட்சி, காவிரியில் அணை கட்டுவதற்குரிய இடத்தை ஆய்வு செய்து சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பா.வெ.மாணிக்க நாயக்கர் குறிப்பிட்ட இடமான மேட்டூரைத் தேர்வு செய்தது. கர்னல் டபிள்யூ எம்.எல்லிஸ் என்ற புகழ்பெற்ற இராணுவப் பொறியாளர் 1910 ஆம் ஆண்டில் அணையை வடிவமைத்து, உரிய மதிப்பீடுகளோடு ஆங்கிலேய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பினார்.
அதே காலகட்டத்தில், அன்றைய மைசூர் சமஸ்தானமும், பொறியாளர் சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா உதவியுடன் காவிரியில் மைசூர் அருகே கிருஷ்ணராஜசாகர் நீர்த் தேக்கத்தை அமைத்திட ஆங்கிலேய அரசிடம் அனுமதி கோரியது.
எனவே, காவிரி நீரைப் பயன்படுத்துவது தொடர்பாக அப்பொழுதே பிரச்சனைகள் எழுந்து, பல்வேறு முயற்சிகளுக்குப் பின் 1924 ஆம் ஆண்டில் சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் அரசுக்கும் இடையே ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. 1924ஆம் ஆண்டுதான் காவிரிப் பிரச்சனை ஆரம்பமானது. அதே 1924ஆம் ஆண்டு தான் நானும் பிறந்தேன். பிறந்தது முதல் இதுவரை அந்தப் பிரச்சனைக்காகத்தான் நான் வாதாடிக் கொண்டிருக்கிறேன். போராடிக் கொண்டிருக்கிறேன். அந்த உடன்படிக்கைக்குப் பின், காவிரியில், மேட்டூர் அணை கட்டுவதற்கு 6 கோடியே 12 இலட்சம் ரூபாயை அனுமதித்து 3.3.1925 அன்று இங்கிலாந்தில் ஆணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து, பொறியாளர் சர்.கிளமெண்ட் முல்லிங்ஸ் (Clement Mullings) என்பவரது தலைமையில் தமிழகப் பொறியாளர்கள், தொழிலாளர்கள், குறிப்பாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கல் தச்சுத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் கூட மேட்டூர் அணையின் கட்டுமான வேலைகளை 20.7.1925இல் தொடங்கி, 1934ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் நிறைவேற்றி முடித்தார்கள்.
ஏறத்தாழ 9 ஆண்டு காலத்தில் 120 அடி உயரத்திற்குத் தண்ணீரைத் தேக்கும்வகையில், 5 ஆயிரத்து 300 அடி நீளமும், 171 அடி அகலமும் உடையதாக கட்டி முடிக்கப்பட்ட இந்த மேட்டூர் அணையிலிருந்து 12.6.1934 அன்று முதன்முதல் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
No comments:
Post a Comment